Saturday, 27 September 2014

பெண்ணிற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்

“பெண்ணிற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; வணக்கம் செலுத்துங்கள். பெண்ணை மதித்துப் போற்றலே நாகரிகம், அவளைக் கட்டுப்படுத்தல் _ அடிமைப்படுத்தல் _ கொடுமையாக நடத்தல் _ அநாகரிகம்’’ என்ற முழக்கத்துடன் முன்வருகிறார் திரு.வி.க.
பெண் விடுதலை என்பதும் பெண்ணின் உரிமை என்பதும் ஒரு பகுதியையே குறிக்கும். பெண்ணின் பெருமை என்பது விடுதலை, உரிமை, மேன்மை ஆகிய அனைத்தையும் குறிப்பது. இதனால்தான் சகல அம்சங்களையும் தழுவியதான இந்தத் தலைப்பில் அவர் எழுதினார்.
நாட்டில் தோற்றமளித்த பிரும்ம சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள், விரேசலிங்கம் பந்துலு போன்ற தீவிர சீர்திருத்த வாதிகளின் சேவைகளால் உத்வேகம் பெற்றார் திரு.வி.க. தேசிய இயக்கம் மலர்ச்சியடைந்து வரும் திசையிலேயே மாதர் குலத்தின் பல்வேறு பிரச்சினைகள் முன்னணிக்கு வந்தன.
கல்வி, செல்வம், ஞானம் அனைத்தையும் பெண்மையை வைத்தே உருவகப்படுத்தி வந்துள்ளது உலகம். ஆனால் இவற்றின் ஆதி சக்திகளான மகளிர் அடிமைகளாய், உரிமை அற்றவர்களாய் நடத்தப்பட்டு வந்துள்ளனர். இந்த அநீதி கண்டு’ பொங்கினார் திரு.வி.க.
“பெண்ணின் பெருமை விளங்க, இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபட உறுதி கொண்டேன்; அதற்கென்று என் வாழ்வை அர்ப்பணஞ் செய்துள்ளேன்’’ என்று தமது மனைவி கமலாம்பிகை மறைந்தகாலை நெஞ்சுருகக் கூறினார் திரு.வி.க. இதுவே அன்னாருக்கு உரிய சிறந்த அஞ்சலியாகும் என்றும் கருதினார்.
ஓலை வேய்ந்த குடிசையில் _ தேளும் பாம்பும் நாடமாடிய இடத்தில் அன்புடன் வளர்த்த அன்னை, பாலூட்டிய வேறு பல தாய்மார், குழந்தைமையில் வேற்றுமை தெரியாது விளையாடிய பெண் குழந்தைகள், பள்ளிப் பருவத்தில் உடன் சேர்ந்து களித்த சிறுமியர், உயர் படிவத்தில் போதனை அளித்த ஆசிரியைகள், அரசியலில் ஆர்வமூட்டிய அன்னி பெஸண்ட் அம்மையார், பொது வாழ்வில் உடன் தொண்டு புரிந்த மாதர் திலகங்கள், சமய சமூக இலக்கியத் துறையிலே பணியாற்றிய சகோதரிகள், வாழ்க்கைத் துணையாக இருந்து பெண்ணின் பெருமையை வழங்கிய கமலாம்பிகை இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வழியில் பெண்மையின் சிறப்பை திரு.வி.க.வுக்கு அருளிச் சென்றுள்ளார்கள்.
இளமைச் சோதனை ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றுபடுத்த எழுகிறது. அவ்வொன்றலினின்றும் அரும்புவது வாழ்க்கை. தனிமையில் வாழ்க்கை விதைவிட விழாது.
வாழ்க்கையைக் குறிக்கொண்டது திருமணம். அத்திருமணத்தை இழப்பது வாழ்க்கைச் செல்வங்களையெல்லாம் இழப்பதாகும்.
ஒருவன் ஒருத்தியினிடத்தினும் ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் கற்பு நெறி தவறாமல் நித்தியப் பற்றுதலுடையோராய் மன ஒருமையெய்தித் தம்முள் ஆதரவு உற்று துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஔவையார் கூறுகிறார் என்று விளம்புகிறார் பாரதி.
காதல் இயற்கை. அவ்வியற்கையுடன் இயைந்து வாழ்தற்கென்று ஒருத்தியென்றும் ஒருவனென்றும் மன்பதை படைக்கப் படுகின்றது. ஒருத்தியையும் ஒருவனையையும் காதலால் ஒருமைப்படுத்துவது இல்வாழ்க்கை. இல்வாழ்க்கை ஒரு கழகம். இல்வாழ்க்கையை அவர் உறுதியாக ஆதரித்தார். போலித் துறவறத்தைச் சாடினார்.
பொல்லாத கணவரிடம் வாழ்க்கைப்பட்டு அவர்தங்கொடுமை தாங்க முடியாமல் கிணற்றில் வீழ்ந்தும், நஞ்சுண்டும், தீயிடை எரிந்தும், தூக்கிட்டும் உயிர் துறந்த பெண்மணிகள் எத்தனை பேர்? என்று திரு.வி.க. கேட்கும் போது, இன்றும் இக்கேள்வி பொருந்தும் என்பதை வேதனை மீதுற உணர்கிறோம். நவநாகரிகப் பட்டணங்களில் வரதக்ஷணைக் கொடுமையால் தற்கொலையில் இறங்கும் தருணிகள் எத்தனை பேர்?
“பெண்ணுலகம் உரிமையுடன் வாழும் நாள் எந்நாள்? மாதர்க்குத் தீங்கு விளைக்கும் மடமைகளை மாய்க்க வேண்டுவது அறிஞர் கடமையன்றோ?’’ என்ற அவர் கேள்வி நமக்குச் சவாலாக அமைகிறது.
மாதர் நலங்கருதியும் மாதர் உரிமைகளுக் காகவும் கொண்டுவரப்பட்ட பல சீர்திருத்த மசோதாக்களையும் திரு.வி.க. ஆதரித்தார். அவை குறித்து கட்டுரைகள் எழுதினார், தலையங்கங்கள் திட்டினார். அவற்றுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கூட்டங்கள், மாநாடுகளில் உரையாற்றினார். இதுபோன்ற இன்னும் பல வருதல் வேண்டுமெனக் கிளர்ச்சி செய்தார்.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சென்னை சட்டசபையில் ஒரு மசோதா கொண்டுவந்தார். வழக்கத்தின் பெயரால் சகோதரிமார் கோயிலில் பொட்டுக் கட்டுதலை நிறுத்தி மணவாழ்க்கையினராதற்கு வழிகோலத் துணைபுரிவது இந்த மசோதா. இதற்குப் பல இடங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. வழுக்கி விழுந்தவர்களின் முன்னேற்றத்தையும் இத் தீய வழக்கத்தை மூடிப் புதைத்திடவும் கருதிக் கொண்டுவரப்பட்டது இந்த மசோதா. திரு.வி.க. இதை ஆதரித்துப் பிரசாரம் செய்தார், எதிர்ப்புகளுக்குப் பதிலடி கொடுத்தார்.
இளமை மணத்தை ஒழிக்க வந்த சாரதா மசோதாவுக்கும் திரு.வி.க. ஆதரவு தந்தார்.
பெண்ணுலகில் படிந்துள்ள மாசுகளையும் அதனைப் பாதித்துத் துன்புறுத்தும் தீம்புகளையும் அகற்றச் சமூகமே முற்படுதல் நல்லது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி இயக்கம் காணத் திரு.வி.க. அவாவினார். நாட்டில் எத்தனையோ அமைப்புகள் இருந்த போதிலும் பெண்ணுலகுக்கு நலம் புரியும் பாதையில் அவை எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்த அவர் ஆங்காங்கு தொண்டர்கள் சேவா சங்கங்கள் கண்டு கிளர்ச்சி புரிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் இத்தகைய சங்கங்களை நிறுவ ஊக்குவித்து மகளிர் இயக்கத்துக்குப் பலமான அடித்தளம் இட்டார் திரு.வி.க. துவக்க நாட்களில் நீதிபதி “சதாசிவய்யர் மனைவி மங்களம்மாள் முதலியோர் இத்துறையில் அரும்பணியாற்றினர்.
திருமணத்தின்போது மணமகள் மணமகனுக்கு மணத்தில் விடுக்கும் செய்தி ஒன்று உண்டு. அது மணமகனே! நீ மற்றப் பெண்களைத் தாய்மாராக நினைந்து வாழ யான் ஒருத்தி உனக்கு மனைவியாக வந்தேன் என்பது என்று சுட்டி இல்லறத்தின் சீரையும் சிறப்பையும் எடுத்துக் காட்டினார் அவர்.
ருக்மணி_அருண்டேல் திருமணம் நடந் தேறியதும் திரு.வி.க., அவர்களைச் சென்னை தொழிலாளர் சங்கத்துக்கு அழைத்து வாழ்த்துரை கூறினார். வைதிகள் மட்டுமன்றி தேசிய இயக்கத்தில் இருந்த சிலர்கூட இதை விரும்பவில்லை. சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் வெகுண்டு மனம் போனவாறு வைதனர்.
சுப்பிரமணிய சிவா தேசபக்தன் நிலையம் வந்து “ஒரு வெள்ளையன் நமது பெண்ணைக் களவாடுகிறான், அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களே’’ என்று திரு.வி.க. முன் கர்ச்சித்தார். “காதல் நுட்பம் உங்களுக்குத் தெரியவில்லை. அந்நுட்பத்தை உணர்ந்து கொள்ளாமலே நீங்கள் காலம் கழித்து விட்டீர்கள். காதற் கண்ணுக்கு வெண்மை கருமை தோன்றுமோ... களவுதான் காதல்’’ என்று திரு.வி.க. கூறினார். சாதி நோயின் வேரை அறவே கல்லவல்ல மருந்து கலப்பு மணமே என்ற முடிவுக்கு வந்த திரு.வி.க., கலப்பு மணத்தை வெகுவாக ஊக்குவித்தார், தாமே முன்நின்று நடத்தி வைத்தார்.
“சாதி மதம் முதலிய வேற்றுமைகளை தொலைக்கவல்லது கலப்பு மணம் என்பது எனது கொள்கை.
“கலப்பு மணம் உலக முழுவதும் நடைபெறுதல் வேண்டும், அதற்கென்று ஆங்காங்குள் தலைவர்கள் பல திற இயக்கங்கள் நிறுவிக் கலப்பு மணத்தில் கருத்திருத்தல் அறம்.
“கலப்பு மணம் காதல் வழியே கூடுகிற தென்பதற்கு விளக்கவுரை வேண்டுவதில்லை. காதல், சாதி மதம் நில நாடு முதலிய கட்டுக்களைக் கடந்தது. ஒருவன் தனக்கு ஒத்த ஒருத்தியையும் அவ்வாறே ஒருத்தி தனக்குத் தக்க ஒருவனையும் தெரிந்தெடுக்கும் உரிமையுடையது கலப்பு மணம்.’’
கைம்மை மணத்தினை அவர் ஆதரித்தார். துணிவுடன் முன்வந்த இளங் கைம்பெண்களை மணக்க வந்தோரைப் பாராட்டினார். இதன் மூலமும் சாதி மத வேற்றுமைகளைக் களைய முடியும் என்று கருதினார். விளம்பரமில்லாத முறையில் இத்துறைகளிலான திரு.வி.க.வின் சேவை போற்றத்தக்கது. சமயப் பற்றுடைய ஒருவர் இவற்றில் தீவிரமாக ஈடுபட்டது இளைஞருக்கு ஊக்கத்தையும் உறுதியையும் வழங்கியது. திரு.வி.க.வே ஆதரிக்கிறார் என்று தெம்புடன் சொல்லி முன்னேகும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. சீர்திருத்தப் பணிகளில் மனப்பூர்வமாக இறங்கிச் செயல்பட்ட அவரது வாழ்வில் உரிமை மணங் கமழ்தல் இயல்பன்றோ.
பெண் கல்வியில் தணியாத ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தவர் திரு.வி.க. இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் சார்பிலே நடந்த பள்ளிக்கூடங்கள் பல. பவானி பாலிகா பாடசாலை அவற்றுள் ஒன்று. அதன் நிருவாகத்தில் ஈடுபட்ட திரு.வி.க. அதைப் பலவழிகளில் புதுக்கினார். நாட்டுப் பற்றை அறிவுறுத்தவும் நடவடிக்கைகள் அனைத்திலும் நாட்டு மணம் கமழவும் வேண்டுமென்று அவர் கருத்துடன் உழைத்து வந்தார். யாழ்ப்பாணம் சென்று  இராமநாதன் மகளிர் கல்லூரியினைக் கண்டு வந்த அவர் தமிழ் நாட்டில் மகளிருக் கான ஒரு பல்கலைக் கழகமே நிறுவப்பட வேண்டும் என்று பேச்சிலும் எழுத்திலும் பெருங் கிளர்ச்சி செய்து வந்தார்.
எளிய சகோதரிமார் நலங்கருதி யாமுன பூரண திலகம்மாள் நடத்தி வந்த யுவதி சரணாலயம் ஆக்கம் பெற நவசக்தி வாயிலாக திரு.வி.க. விண்ணப்பம் செய்து ஆதரவு திரட்டித் தந்தார். இது போன்ற நோக்குடன் பின் நாட்களில் தோன்றிய அமைப்புக்களுக்கும் துணை நல்கினார்.
மாதர் இயக்கத்தின் முன்னணி ஊழியரான இராமாமிர்தம் அம்மையார், வழுக்கி விழுந்த சகோதரிகள் சம்பந்தமாக (1925) ஒரு மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டில் திரு.வி.க. உரையாற்றினார். இம் மகளிர் குறித்த சில மெய்விவரங்கள் திரட்டப்பட்டன. அவற்றில் ஒரு சில:
ஒரு பெரும் நிலக்கிழார். அவர்தம் வைப்பாட்டி ஓர் இசை வேளாளப் பெண்மகள். அவள் கருவுற்றாள். கருவைச் சிதைத்கக் கிழவர் முயன்றார், முயற்சி வெற்றி பெறவில்லை. குழந்தை பிறந்தது. கிழவர் ஆணையும் உடன் பிறந்தது. “இக் குழவியைக் காவேரியில் எறிந்துவிட்டு மறுவேலை பார்’’ என்றார் கிழவர். ஈன்ற தாய் குழந்தையை வேறிடத்தில் விடுத்து அவர் சொன்னபடி செய்து விட்டதாகப் பொய் கூறினாள்.
சங்கத் தொண்டின் விளைவாக மனந்திரும்பி ஒரு சகோதரி ஆசிரியத் தொழில்மீது நாட்டங் கொண்டாள். இதைக் கண்டு வெறிகொண்ட ஒரு மிராசுதார் அவளது முகத்தைக் கீறி சித்திரவதை செய்தனர்.
அறிவொழுகும் இளம் பெண். “பள்ளியிற் சேர்ந்து படிக்கிறீரா?’’ என்று கேட்டபோது ஒரு குறிப்பிட்ட மடாதிபதி தன் தலையை வாங்கி விடுவார் என்று கூறினாள்.
1938_ல் எட்டாவது எட்வர்ட் மன்னர் வின்சர் கோமகளாரைக் காதலித்துக் கடிமணம் செய்து கொள்ள விரும்பினார். அரசச் சட்ட திட்டமும் புரோகிதச் சட்டமும் அதனைத் தகைந்தன. அவர் காதலுக்காக முடியைத் துறந்தார். இது ஒரு சம்பவம் மட்டுமே. ஆனால் திரு.வி.க. இதில் காதலின் பெருமையைக் கண்டார்.
முடியா, காதலா, சீர்திருத்தமா? என்ற மகுடத்தில் ஒரு நூலே எழுதி வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
“காதல் என்பது தெய்வத் தன்மை வாய்ந்தது; அது காமமன்று, காதல், கடலினும் பெரிது; அகிலத்தினும் பெரியது; அதற்கு ஈடுமில்லை எடுப்புமில்லை; காதல் எல்லையற்றது; அதற்கு அகலமுமில்லை; நீளமுமில்லை.
“காதலுக்கு முன்னே கல்வி என்ன, செல்வம் என்ன, சீர் என்ன, சிறப்பென்ன_பதவி என்ன_ பட்டம் என்ன _ அரசு என்ன _ சாம்ராஜ்யம் என்ன. எல்லாஞ் சிறுமை! சிறுமை! காதலுக்குக் காதலே ஈடும் எடுப்பும். காதலுக்குக் காதலே பெருமை.
“இருவரை மணந்து விலகிய ஒருத்தி காதற்கனி யாவாளோ? என்பதே புல்லிய உலகைக் கலக்கியிருக்கிறது. வின்சர் கோமகளார் மேல் நாட்டுப் பெண்மணி. அவ்வம்மையார் செயலை மேல்நாட்டு வழக்கவொழுக்கக் கண்கொண்டே பார்த்தல் வேண்டும்.
“எவரெவர் எவ்வெவ் வழக்கவொழுக்கங்களிற் படிகிறாரோ அவரவர் அவ்வவ்வொழுக்கங்களின் வண்ணமாதல் இயல்பு.
“நாகரிக வாழ்வுக்கு உயிர் போன்றது திருமணம். அத்தகைத் திருமணத்தில் ஈடுபடு வோருக்கு உரிமை இருத்தல் வேண்டுமா வேண்டாமா? அத்துறையில் உரிமை இல்லை யேல் வாழ்வு பாழாகும். திருமணத்தில் உரிமை பெறாத சமூகமோ நாடோ எதுவோ ஆக்கம் பெறாது சாம்பி நைந்து ஒழிந்து போகும்.
“யான் காதலிக்கும் பெண்மணியை மணஞ் செய்து கொள்ள முடி தடையாக நின்றால் யான் முடியையே துறப்பேன் என்று மன்னர் கூறினார்.
“காதல் மணத்துக்கு உரிமை இருத்தல் வேண்டும். அதைக் கட்டுப்படுத்தச் சட்டத் திட்டம் எற்றுக்கு? சம்பிரதாயம் எற்றுக்கு? அவைகளெல்லாம் தகர்க்கப்பட வேண்டும். அவைகளைத் தகர்க்க சீர்திருத்தக்காரர் எழுவாராக.
“சரித்திர உலகை நோக்கினால் புரோகித உலகின் கொடுமை நன்கு புலனாகும். புரோகித உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல; சமூகங்கள் பல, கலைகள் பல, நாகரிகங்கள் பல.’’
பெண்ணின் பெருமை என்ற நூலை திரு.வி.க. எந்த நோக்குடன் வெளியிட்டரோ அந்த நோக்கம் படிப்படியே நிறைவேறியே வருகிறது. அது ஒரு பெரும் சமுதாயப் புரட்சியைச் செய்து வருதல் கண்கூடு. “பெண்ணின் பெருமை பிறங்கப் பிறங்க நாடு விடுதலையடைதல் ஒருதலை’’ என்னும் திரு.வி.க. கூற்று மெய்ப்பாடாகி விட்டது.
“நான் ஆடவருக்குக் கவி, அதேபோல் மகளிருக்கும் கவி. ஆடவராயிருப்பது எத்தனை மகத்தானதோ அதற்கிணையாய் மகளிராய் இருப்பதும் மகத்தானது. மனிதனின் அன்னை என்பதைவிட மாபெரும் மாட்சி வேறுளதோ’’ எனும் கவி விட்மனின் கூற்று இங்கு கவனத்திற்குரியதாகும். பெண்மை பற்றி எண்ணிப் பார், பெண்ணாக இருந்து பார், அனைத்தையும் அடக்கியது பெண்மை, அகிலத்தில் பெண்மையைவிடச் சிறந்தது வேறுளதோ என்றும் அவர் கூறுகிறார்.
thanks to
கே. இராமநாதன்
புதிய பார்வை | ஜூலை 1 - 15, 2014

No comments:

Post a Comment