பிரசவத்திற்குப் பின்னர் பெண்களில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள்
பெண்கள் தமது குழந்தையைப் பிரசவித்து தாய்மைப்பேற்றை அடைந்த பின்னர் வரும் பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதி ஒரு முக்கிய விடயமாகும். இக்காலப் பகுதியில் மேற் கொள்ள வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமான விடயங்கள் பல பெண்களுக்கு உள்ளன. ஆனால் நடைமுறையில் இவை யாவும், பெண்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட்ட விடயங்களாகவே இருந்து வருகின்றன. கர்ப்பமாகிய பெண்ணொருவர் தமது பிரசவத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? அதாவது சிசேரியன் பிரசவமா? அல்லது சாதாரண சுகப் பிரசவமா? எனப் பல ஏக்கங்களுடன் இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதி யில் பெண்ணில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எவை?
பிரசவம் முடிவடைந்த பின்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் சரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஆரம்பிக்க வேண்டும். இதன்போது, ஏற்படும் எதிர்பாராத கருத்தங்கலை தடுக்க முடியும். பிரசவத்தின் பின்னர் குடும்பக் கட்டுப்பாட்டு முறையின் அவசியம் தெரியாமல், பலர் எதிர்பாராத விதமான, திட்டமிடப்படாத கருத்தங்கலுக்கு ஆளாகின்றனர். இதன்போது சில மாதங்களே வயதுடைய ஒரு கைக்குழந்தையுடன் மீண்டும் கருத்தரித்தால் நடைமுறையில் ஒரு பெண் எந்தளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதனை யாவரும் அறிந்துள்ளனர். இந்த வேளையில் பல தம்பதிகள் கூறுவது தமக்கு இவ்வாறு உடனடியாக குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பாவிக்க வேண்டும் என்பதனை எவரும் சரியாக எடுத்துக் கூறவில்லை என்பதே ஆகும். அத்துடன் இவ்வாறான எதிர்பாராத விதத்தில் கருத்தரித்தால் அதனை எமது நாட்டில் சட்ட ரீதியாக கருக்கலைக்க முடியாது என்பதால் நாம் பலவித நடைமுறை சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. ஆகையால் இவற்றை வருமுன்னே தடுப்பது சிறந்தது. பிரசவம் முடிவடைந்த பெண்ணொருவர் பாலூட்டும் தாயாக இருக்கும் போது, அவர் பாவிக்கக் கூடிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளாவன:
குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி, குடும்பக் கட்டுப்பாட்டு லூப் என அழைக்கப்படும் கர்ப்பப்பையினுள் போடப்படும் சிறிய குச்சி மற்றும் கையில் தோலின் கீழ் போடப்படும் சிறிய குச்சி போன்ற பல உள்ளன. இவற்றால் பக்க விளைவுகள் எதுவுமில்லை. அல்லது மிகவும் புறக்கணிக்கக் கூடிய அளவே பக்க விளைவுகள் காணப்படும். ஆனால், இவற்றால் ஏற்படும் நன்மைகள் தான் அதிகம். ஆனால், பாலூட்டும் தாயொருவர் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை பாவிப்பது உகந்ததல்ல. ஏனெனில் அவற்றால் தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆகையால் பிரசவத்திற்குப் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் சரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஆரம்பிப்பது அவசியம்.
பிரசவம் முடிவடைந்த பின்னர் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய விடயம் தமது வயிறு பெரிதாகவே உள்ளது என்பதே ஆகும். அவர்களைப் பார்த்துப் பலர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளீர்களா? எனக் கேட்கும் அளவிற்கு வயிறு பெரிதாக தள்ளப்பட்டிருப்பது எமது பெண்கள் மத்தியில் உள்ள பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்குக் காரணம் பிரசவம் முடிவடைந்த பின்னர் அவர்கள் தமது வயிற்றுத் தசைகளை இறுக்கமாக்கும் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமையே ஆகும். கர்ப்பகாலத்தில், குழந்தையை வயிற்றில் தங்கும்போது அவர்களின் வயிற்றின் தசைகள் இழுபட்டுப் பலவீனமடைவது வழக்கம். இதனை நாம் பிரசவத்திற்குப் பின்னர் உடற்பயிற்சிகள் மூலம் இறுக்கமடையச் செய்ய வேண்டும். இதற்காக நாம் உடற்பயிற்சிகளை சாதாரண பிரசவமாயின் மறுநாளே ஆரம்பிக்கலாம். ஆனால் சிசேரியன் பிரசவம் ஆயின் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கலாம்.
இதற்கு பெண்கள் மேல்நோக்கிப் பார்த்த வண்ணம் படுத்து, தமது கால்களை முழங்காலை மடிக்காமல் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இதனை மாறி மாறி செய்து பின்னர் இரு கால்களையும் சேர்த்து முழங்காலை மடிக்காமல் உயர்த்திப் பின்னர் சிறிது நேரத்தில் கீழே விட வேண்டும். இவ்வாறாக நாளாந்தம் 10 – 15 நிமிடங்கள் செய்யும்போது ஓரிரு மாதங்களில் வயிறு இறுக்கமடைந்து பழைய நிலைக்குப் போய்விடும்.
பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் உளவியல் மனநிலை மாற்றங்கள்:
பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் மன உளவியல் தாக்கங்கள் ஒரு பொதுவான பிரச்சினை. இது மிகவும் ஒரு எளிய ஆர ம்ப நிலையில் தோன்றலாம். சிலரில் மிகத் தீவிரமான மனநோய் போன்றும் ஏற்பட லாம். மிக எளிய ஆரம்ப நிலை போன்ற மனநிலை மாற்றங்கள் பிரசவத்தின் பின் னர் 3ஆம் நாளில் தொடங்கி ஓரிரு நாட்களில் சற்றுத் தீவிரமடையும். இவர்கள் அடிக்கடி அழுதல், நித்திரை இல்லாத தன்மை, சினத்தல், பயம் போன்ற தன்மைகளை வெளிப்படுத்துவார்கள். இவை 50% வீதமான பெண்களில் பிரசவத்தின் பின்னர் வெளிப்படும். அதுவும் முதற் பிரசவத்தின் பின்னர் வெளிப்படும்.
இவற்றைக் கூட இருப்பவர்கள் கண்டறிந்து சரியான ஒத்துழைப்புடன் அணுகும் போது சில நாட்களில் இவற்றிலிருந்து விடுபட முடியும். ஆனால், சிலரில் பிரச வத்திற்குப் பின்னர் இரு வாரங்களில் தீவிர மனநிலை மாற்றங்கள் சற்று மனநோய் போன்ற அளவில் வெளிப்படுகின்றது. இவர்கள் தூக்கமின்மை, சாப்பிட முடியாமை, எளிதில் கோபமடைதல், சரி யாகக் கிரகிக்க முடியாமை போன்ற நிலைகளைக் கொண்டிருப்பதுடன், தமது பிறந்த குழந்தையை சரியான விதத்தில் பார்த்துப் பாதுகாக்க முடியாதவர்களாக வும் இருப்பார்கள். சிலவேளைகளில் இவர் கள் தாம் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவுக்கு மனநிலையில் மாற்றங்களைக் கொண்டிருப்பார்கள்.
இவையெல்லாம் பிரசவத்திற்குப் பின் னர் பெண்களில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் அவர்களையே அறியா மல் ஏற்படுகின்றன. நாமும் அந்தப் பெண் ணிற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்காமல், பிறந்த குழந்தையைக் கவனிப்பதிலேயே அக்கறை செலுத்தும்போது, இந்நிலை அப்பெண்ணை மேலும் பாதிக்கின்றது.
ஆகையால் பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையின் நடவடிக்கைகளில் அக்க றையும் கவனமும் செலுத்துவது போல தாயான அந்தப் பெண்ணினது மன நிலை, உளவியல் மாற்றங்கள், குறித்து கணவன்மார் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏதாவது அசாதாரண மனநிலை மாற் றங்களை பெண் பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படுத்தினால், அதனை ஆரம்பத்தி லேயே தகுந்த மருத்துவ ஆலோசனையை நாடி, அதன் மூலம் மன உளவியல் மருத்துவ நிபுணர் களின் உதவியைக் கூட சிலவேளைகளில் பெற்று இதற்குச் சரியான தீர்வும் பரிகாரமும் பெற முடியும்.
thank to:
டாக்டர் கு.சுஜாகரன்
மகப்பேற்று பெண் நோயியல்
சத்திரசிகிச்சை நிபுணர்
No comments:
Post a Comment