![]() |
![]() |
![]()
பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (1)
கேள்வி - 01 : என்
வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில்
எனக்கு பயங்கரமான நீர்கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா?
பதில் : மண்பானை
செய்கிறவர்களிடம் சுத்தமான களிமன் வாங்கி அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு
சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித்
தடவிக்கொண்டு, காலையில் குளித்துவிடவும். இதை வாரம் மூன்று நாள் செய்யலாம்.
கேள்வி - 02 : எனக்கு
வயது 26. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. கணவருக்கு தாம்பத்ய உறவில்
நாட்டமில்லை. கணவர் வீட்டார் எல்லோரும் என்னிடம் குறையிருப்பதாகச்
சொல்லிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்களில் கரு தங்கவில்லையென்றால், கணவருக்கு
மறுமணம் செய்துவிடுவோம் என்கிறார்கள். கணவரோ மாதத்தில் ஒரு நாள்
சேர்ந்தாலே கருத்தரிக்கும் என்கிறார். அது சாத்தியமா? படுக்கைக்கு வந்ததும்
தூங்கிவிடுகிறார். என் கணவர் சொல்வதுபோல் மாதத்தில் ஒருநாள் உறவு கொண்டாலே
குழந்தை பிறக்குமா? எத்தனை நாட்கள் உறவு கொள்ள வேண்டும்? என்ன செய்வது?
பதில் : ஒருமுறை
உறவு கொண்டாலே குழந்தை பிறக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒன்றும்
சினிமா இல்லை. கணவருடைய தவறான அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். கணவர்
உங்களிடமிருந்து ஒதுங்கியிருக்க என்ன காரணம் என பாருங்கள். பேசுங்கள்.
மனரீதியாக அவருக்கு ஏதேனும் கோளாரா அல்லது வேறு பிரச்சனைகளா என முதலில்
கண்டுபிடியுங்கள்.
அவரது
அம்மா உங்களிடம் நல்ல முறையில் பழகும்பட்சத்தில் அவரது உதவியை நீங்கள்
நாடலாம். மாமியாரிடம் உண்மையைச் சொல்லி விசாரிக்கச் சொல்லலாம். கணவரின்
தயக்கத்துக்கு என்ன காரணம் என்பதை அவருக்கு நெருங்கிய நபர்களின் மூலமாக
முதலில் கண்டுபிடித்துப் பேசச்சொல்ல வேண்டும். மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ
அவருக்கு பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால், அதற்குச் சிகிச்சை அளிக்க
ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களுக்கு
மாதவிடாய் சரியாக இருந்தால், மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து
கணக்கிட்டால் பதினான்காம் நாள் கருமுட்டை வெளியாகும். அதற்கு முன்பாக
மூன்று நாட்களிலிருந்து தொடர்ந்து ஒருவாரத்திற்கு உடலுறவு வைத்துக்கொண்டால்
குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்.
தைரியமாக இருங்கள்.
கேள்வி - 03 : என்
வயது 64. கணவருக்கு 67. நானும் அவரும் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்கிறோம்.
இப்போதும் நானும் அவரும் உறவில் உச்சத்தை அடைகிறோம். இதனால் எங்கள்
இருவருக்கும் உடல்ரீதியாக ஏதேனும் பாதிப்பு வருமா? எத்தனை வயதுவரை உடலுறவு
வைத்துக்கொள்ளலாம்?
பதில் : 60
வயதைக் கடந்தும் ஆரோக்கியமான தாம்பத்ய உறவு உங்களுக்குள் இருக்கிறது
என்பது மிகவும் மகிழ்ச்சிக்குறிய விஷயம். பொதுவாக பெண்கள் மெனோபாஸ்
கட்டத்தை அடைந்ததுமே அவர்களுக்கு ஆர்வம் குறையும். பிறப்புறுப்பு வரட்சி
அதிகரிக்கும். உறவில் எரிச்சல் இருக்கும். ஆணுக்கும் பெரும்பாலும்
முழுமையான உறவு சாத்தியப்படாது. ஆனால், உங்கள் விஷயத்தில் அப்படியில்லாமல்
ஆரோக்கியமாகவே இருப்பதாகத் தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
செக்ஸ்
வைத்துக்கொள்ள வயது வரம்பெல்லாம் கிடையாது. மனசும் உடம்பும் இடம்
கொடுக்கும்வரை எத்தனை வயதிலும் உடலுறவு கொள்ளலாம். அதனால் பாதிப்பு வராது.
கேள்வி - 04 : எனக்கு
திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. உறவில் முழுமையாக ஈடுபட
முடியவில்லை. அதற்கு என் பிறப்புறுப்பு முழுமையாக அனுமதிக்காத மாதிரி
உண்ர்கிறேன். முழுமையான உறவு எனக்கு சாத்தியமா? கர்ப்பம் தரிக்குமா?
பதில்:
உங்களுடைய பிரச்சனைக்கு 'Vaginismus' என்று பெயர். அதாவது இந்தப்
பிரச்சனையில் உறவின்போது பிறப்புறுப்பில் மூன்றில் ஒருபாகம் உறவுக்கு
ஒத்துழைக்காது. அதனால் உறவு முழுமையடையாத மாதிரி தோன்றும். இது முழுவதும்
குணப்படுத்தக் கூடியதே..
உறவின்போது
தேவையற்ற பயம், டென்ஷன், மன இறுக்கம் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
மனதுக்குப் பிடித்த சூழலில் அமைதியாக உறவு கொள்ளுங்கள். உறவு
முழுமையடையுமா. கணவரைத் திருப்தி படுத்த முடியுமா என்கிற மாதிரியான கவலைகள்
எதுவும் வேண்டாம். இதையெல்லாம் செய்தும், உங்கள் பிரச்சனை
சரியாகவில்லையென்றால் மகப்பேறு மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனைப்
பெறுங்கள்.
கேள்வி - 05 : என்
வயது 30. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை.
தாமதமாக திருமணம் ஆனதால் குழந்தை இல்லையா? கணவருக்கு குடிப்பழக்கமும்
இருக்கிறது. அது காரணமாக இருக்குமா?
பதில் : குழந்தையின்மைக்கான
காரணங்களை நீங்களே சொல்லிவிட்டீர்களே. கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்தச்
சொல்லுங்கள். குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு உறவில் உறவில் ஆர்வம்
இருப்பதுபோல் வெளியில் தெரிந்தாலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் போகும்.
உறவின் தன்மையை அது நிச்சயம் பாதிக்கும்.
அடுத்து வயதும் ஒரு காரணம். இதுவே குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தாமதமான வயது. இனியும் காத்திருப்பது நல்லதல்ல.
![]()
கேள்வி - 06 : நான்
ஒரு கல்லூரி மாணவி. வயது 22. நான் பூப்பெய்தி ஆறு வருடங்கள் ஆகிரது.
எனக்குப் பிறப்புறுப்பு பகுதியில் ரோம வளர்ச்சியே இல்லை. இதைப்பற்றி
பிறரிடம் கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. இதனால் பிற்காலத்தில் ஏதேனும்
பிரச்சனைகள் வருமா?
பதில் : பிறப்புறுப்பு
என்பது மிக மெல்லிய செல்களால் ஆனது. எனவே அங்கே அடிபடாமலிருப்பதற்காகப்
பாதுகாப்புக் கவசமே ரோம வளர்ச்சி. பிறப்புறுப்பு என்றில்லை. உடலின் வேறு
சில பகுதிகளில் ரோம வளர்ச்சி காணப்படுவதும் இதற்காகவே. நீங்கள் வயதுக்கு
வராமலிருந்து, முடி வளர்ச்சியும் இல்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும்.
வயதுக்கு வந்துவிட்டதால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஒருசிலருக்கு
திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும்கூட ரோம வளர்ச்சி வரலாம். எனவே இதற்கும்
உங்கள் எதிர்கால தாம்பத்ய வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எல்லா
பெண்களைப்போல நீங்களும் திருமணத்திற்குத் தயாராகலாம்.
கேள்வி - 07 : என்
வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு
கிட்னியுடந்தான் வாழ்கிறேன். அதனால், மாதவிலக்குப் பிரச்சனைகள், கை, கால்
வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான்
கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா?
பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் தான் பிறக்குமா?
பதில் : நீங்கள்
திருமணம் செய்யக்கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக்கொள்ளும் நல்ல கணவர்
கிடைத்தால் தாராளமாக செய்துகொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும்,
ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நீங்கள்
குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சனைகளுக்குச் சரியான சிகிச்சைகளின் மூலம்
தீர்வு காணலாம்.
ஒரு
கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையிலோ, கர்ப்பம்
தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால், உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும்
ஒரு கிட்னியுடன் பிறக்க 50 சதவீதம் வாய்ப்புகள் உண்டு.
கேள்வி - 08 : என்
வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் மார்பகங்களின்
காம்புகள் உள்ளே இழுத்தபடி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள்
சிறுத்துக்கொண்டே போகின்றன. என்ன தீர்வு?
பதில் : இதற்கு
''இன்வர்ட்டட் நிப்பிள்ஸ்'' எனச் சொல்வார்கள். அப்படியிருப்பின் நீங்கள்
திருமணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில்
இந்தப் பிரச்சனை தானாக சரியாகிவிடும்.
மற்றபடி
மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா என தெரிய வேண்டும். நல்ல
மகப்பேறு மருத்துவரை நேரில் கலந்தாலோசிக்கலாம். வலி இருந்தாலும் உடனடியாக
மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். பிரசவத்துக்குப் பிறகு குழந்தை
தாய்ப்பால் குடிக்கிறபோது இவை சரியாகும். கவலைப்பட வேண்டாம்.
கேள்வி - 09 : நான்
ஒரு டீன்-ஏஜ் பெண். எனக்குப் பின்பக்கம் மிகவும் பெருத்துக்
காணப்படுகிறது. தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். இத்தனைக்கும் நான்
ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். பின்பக்கம் குறைவதாக இல்லை. செக்ஸ் அனுபவம்
இருப்பவர்களூக்கும், செக்ஸில் ஆர்வம் அதிகமிருப்பவர்களுக்கும் தான் இப்படி
இருக்கும் என்று கேலி செய்கிறார்கள். குறைக்க வழியே கிடையாதா?
பதில் : உங்கள்
பிரச்சனைக்கு ஒரே தீர்வு உடற்பயிற்சிதான். சாப்பாட்டைத் தவிர்ப்பதால்
எந்தப் பலனும் இல்லை. இடுப்பு, தொடைகள், கால்கள் போன்றவற்றுக்கான
பயிற்சிகளைச் செய்தால் குணம் தெரியும். இதுவும் ஒரேநாளில் பலன் தராது.
தன்னம்பிக்கையுடன் விடாமல் செய்தால் பலன் நிச்சயம்.
உங்கள்
தோழில்கள் கிண்டல் செய்கிற மாதிரி பின்பக்க சதை பெருத்திருக்கவும், செக்ஸ்
உணர்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் அனுபவம்
உள்ளவர்களுக்குப் பின் பக்கம் பெருத்திருக்கும் என்பது வேண்டுமென்றே உங்களை
வெறுப்பேற்ற அவர்கள் சொல்கிற விஷயங்கள். எதையும் காதில்
போட்டுக்கொள்ளாதீர்கள்
கேள்வி - 10 : என் வயது 26. எனக்கு எப்போதும் மாதவிலக்கு எட்டு, ஒன்பது நாட்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் நான் உறவு கொண்டால் கருத்தரிக்குமா?
பதில் : மாதவிலக்கு
என்பது இப்படி எட்டு, ஒன்பது நாட்களுக்கெல்லாம் வரக்கூடாது. இது
ரத்தசோகையில் கொண்டுவிடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள்
உதிரப்போக்கு இருக்கிறது என்பதற்கு ரத்தப்பரிசோதனை செய்து பாருங்கள்.
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்ட, அவர்கள் சத்துள்ள
ஆகாரம் உண்ன வேண்டியது அவசியம். தினம் இரண்டு மூன்று பழங்கள் சாப்பிடவும்.
ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்றவை நல்லது. பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
இரண்டுவகைக் காய்களை தினம் ஒரு கப் சாப்பிட வேண்டும். இவை மாதவிலக்கின்போது
உடல் இழக்கும் இரும்புச்சத்தை ஈடுகட்டும். நோய் எதிர்ப்பு சக்தியைத்
தரும். மருத்துவரை சந்தித்து, இப்படி நாள்கணக்கில் தொடரும் ரத்தப்போக்கைக்
கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளவும். கவனிக்காமல் விட்டால் விரைவில்
நோயாளி மாதிரி ஆகிவிடுவீர்கள்.
முதலில்
இப்பிரச்சனையைச் சரி செய்துகொண்டு பிறகு உறவைப்பற்றி யோசிக்கலாம்.
பொதுவாகவே மாதவிலக்கு நாட்களில் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது.
முதலில் உங்களைச் சரிசெய்துகொண்டு மற்றவைகளைப் பாருங்கள்.
![]()
கேள்வி - 11 : என்
வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம
வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.
மஞ்சள் உபயோகித்தும் பலன் இல்லை. வேறு என்னதான் தீர்வு இருக்கிறது இதற்கு?
பதில் : உங்களுக்கு
மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன்
கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும்.
ஒரு
வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒருமுறை
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாதவிலக்கு சுழற்சியை
சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு
முன்புவரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற
ஹார்மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம்.
பயத்தம்பருப்பு
மற்றும் கஸ்தூரிமஞ்சளை அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காயவிட்டு
கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில்
தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம்
கழித்து திரெட்டிங் செய்து கொள்ளவும். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப்
படிப்படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
கேள்வி - 12 : எனக்கு
குழந்தை பிறந்த பிறகு சிறிநீரை அடக்க முடியாத நிலை உண்டாகிவிட்டது.
சிரித்தால், தும்மினால், இருமினால்கூட சிறுநீர் கசிகிறது. இதற்கு என்ன
சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?
பதில் : நிறைய
பெண்களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது. பிரதான காரணம் ரத்த சோகை. உலக அளவில்
இந்தியப் பெண்கள்தான் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது
சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்று.
வெளிவேலை,
வீட்டுப்பொறுப்பு என இரட்டைச்சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும்
அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்துபோன உணவு, முதல்நாள்
சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். ரத்தசோகையைக்
குணப்படுத்திக்கொண்டாலே இப்பிரச்சனை சரியாகும்.
''ஈஸ்னோஃபிலியா''
இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள
வேண்டும். இவை தவிர சிறுநீரத்தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும்
இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படி இருக்கிறது என்பதை
மருத்துவரை நேரில் சந்தித்து சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.
கேள்வி - 13 : எனக்குப்
பிரசவமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்புதான்
காப்பர்-டி போட்டுக்கொண்டேன். தாய்ப்பால் சுரப்பே இல்லை. நானும் மிகவும்
மெலிந்து காணப்படுகிறேன். தாய்ப்பால் சுரக்காததற்கு இது ஒரு காரணமா?
பதில் : உடல்
மெலிவுக்கும், காப்பர்-டி போட்டதற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் நீங்கள்
நினைக்கின்ற மாதிரி எந்தத் தொடர்பும் இல்லை. தாய்ப்பால் சுரக்கவில்லையே என
கொடுப்பதை நிறுத்தாதீர்கள். குழந்தை வாய் வைத்து உறிஞ்ச உறிஞ்சத்தான்
பால்சுரப்பு அதிகரிக்கும்.
சத்தான உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். பசலைக்கீரை, பால், பூண்டு என நிறைய சாப்பிடுங்கள்.
கேள்வி - 14 :
எனக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் சுரப்பு
இல்லை. நான் மிகவும் ஒல்லியாக இருக்கின்றேன். மார்புகள் சிறுத்தும் உள்ளன.
தாய்ப்பால் சுரப்பு குறைவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புண்டா?
பதில் : உடல்வாகுக்கும்,
தாய்ப்பால் சுரப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒல்லியான உடல்வாகோ,
சிறுத்த மார்பகங்களோ தாய்ப்பால் சுரப்பைக் குறைக்காது. தாய்ப்பால் இல்லை
என்ற காரணத்தால் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்தாதீர்கள். குழந்தை வாய்
வைத்து சப்பி, உறிஞ்சிக் குடித்தால், சுரப்பு அதிகரிக்கும். நீங்கள்
உணவில் கால்சியம், இரும்பும் அதிகமுள்ளவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பூண்டு போன்றவை தாய்ப்பால் சுரப்பை
அதிகரிக்கும்.
|
No comments:
Post a Comment